தூத்துக்குடி, ஏப். 25: தூத்துக்குடியில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு டூவிபுரம், மணி நகர், அண்ணா நகர், திம்மையார் காலனி, ஆட்டோ காலனி பகுதிக்கான ரேஷன் கடை, புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வந்தது. இந்த ரேஷன் கடை தூரமாக இருப்பதால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி, கடையை டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிக்குட்பட்ட இடத்தில் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது முயற்சியால் சொந்த செலவில் இந்த ரேஷன் கடையை டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைத்து கொடுத்துள்ளார். மேலும் ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். இதில் தூத்துக்குடி வட்ட வழங்கல் தனி தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை, கூட்டுறவு மேலாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க மேலாளர் பட்டுராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் அதிர்ஷ்டமணி, மாநகர துணை செயலாளர் கனகராஜ், இளைஞரணி சிவக்குமார் என்ற செல்வின், அருண்சுந்தர், அல்பர்ட் பிரதீப், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், வட்ட செயலாளர் பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.