வந்தவாசி பிப்.9: வந்தவாசி அருகே பயிர்களை சேதப்படுத்திய கொக்குகளை விரட்டி அடிக்க துப்பாக்கியால் சுட முயன்ற வாலிபரின் தொடையில் தவறுதலாக குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(32), விவசாயி. இவர் சோலையருகாவூர் கிராமத்தில் நிலத்தை குத்தகை எடுத்து பயிரிட்டு வருகிறார். நேற்றுமுன்தினம் விவசாய நிலத்தில் கொக்குகள் அதிகளவில் நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் கொக்குகளை விரட்டுவதற்காக அதனை நோக்கி சுடுவதற்காக பெருமாள் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெருமாளின் தொடைமீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெருமாளை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி குண்டுபாய்ந்து வாலிபர் படுகாயம் வந்தவாசி அருகே பரபரப்பு பயிர்களை சேதப்படுத்திய கொக்குகளை விரட்ட சுட்டபோது
previous post