இடைப்பாடி, ஜன.19: இடைப்பாடி அருகே சக்தி விநாயகர், காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த தீமிதி விழாவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டி சக்தி விநாயகர், காளியம்மன் கோயில் திருவிழா, கடந்த வாரம் புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. ஞாயிற்றுக்கிழமை சக்தி கரகம் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை தீமிதி விழா நடந்தது. முதலில் பூசாரி கரகத்துக்காரர் தீ மிதித்தார். அதனை தொடர்ந்து பெண்கள் கைக்குழந்தைகளை தூக்கியபடியும், அலகு குத்தியபடியும், அக்னிசட்டி ஏந்தியவாறும், சிறுவர் முதல் பெரியவர் வரை, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவையொட்டி, இடைப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீ மிதி விழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடன்
previous post