திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா தித்திப்புடன் நல்ல சுவையாக இருக்கும். ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பிட்ட சிலரே பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டனர். தேவை அதிகரித்துள்ளதால் தற்போது குடிசை தொழிலாக இங்கு நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டாளை தரிசிக்க திருவில்லிபுத்தூர் வரும் பக்தர்கள் மறக்காமல் வாங்கி செல்வது பால்கோவா ஆகும்.ஆரம்பத்தில் பால்கோவா மட்டும் தயாரிக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது கருப்பட்டி பால்கோவா, வெல்ல பால்கோவா, கேரட் பால்கோவா, பால் அல்வா, பால் கேக் என பாலில் பலவித ருசிகளில் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர அனைத்து பால் ஸ்வீட்களும் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பால்கோவா தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் திருவில்லிபுத்தூருக்கு ஜவுளி, பொருட்கள் வாங்க வருவோர் மறக்காமல் பால்கோவா வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை களைகட்டியுள்ளது. பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக இயந்திரங்களை பயன்படுத்தி பால்கோவா தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.பால்கோவா விற்பனையாளர் ரவி கூறுகையில், ‘‘ஆரம்பகாலத்தில் சாதாரண குடிசைத் தொழிலாக பால்கோவா தயாரித்தோம். தற்போது தீபாவளி பண்டிகைக்கு அதிகம் தேவைப்படுகிறது. இதனால் இயந்திரங்களை பயன்படுத்தி தயாரித்து வருகிறோம். ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமி என்பதால் இயற்கையாகவே இப்பகுதியில் கிடைக்கும் பாலுக்கு தனி சுவை உண்டு. இந்த பாலில் தயாரிக்கப்படும் பால்கோவாவும் சுவையானதாக இருக்கும். பல்வேறு பகுதிகளில் பால்கோவா தயாரித்தாலும் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு தனி மவுசு உள்ளது. பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கொரோனாவால் கடந்த 2 ஆண்டாக விற்பனை டல்லாக இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது’’ என்றார்….