ஈரோடு,நவ.5: தீபாவளியையொட்டி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே ஊதியம் வழங்கப்படும் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், மலேரியா பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் மாதந்தோறும் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநகராட்சி நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல 31ம் தேதி அல்லது 1ம் தேதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மாநகராட்சி நிதிநிலை பற்றாக்குறை மற்றும் நிர்வாக காரணங்களால் மாத தொடக்கத்தில் ஊதியம் வழங்க முடியாத நிலை இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி முன்கூட்டியே ஊதியம் வழங்க வேண்டும் என்று தற்காலிக பணியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தற்காலிக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த மாதம் முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஊதியம் வழங்குவது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடப்பட்டுவிட்டது. 2 நாட்களில் அதாவது 6 அல்லது 7ம் தேதிக்குள் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.