பிர்பூம்: மேற்கு வங்க மாநிலத்தில் 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் பலர் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாக பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர். வீடு எரிவதை அறிந்தும் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். இச்சம்பவம் குறித்து மேற்குவங்க காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது பிரதான் என்பவர் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 10 பேர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் அடைத்துவைத்து கொளுத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். …