பூந்தமல்லி, ஜன. 29: திருவேற்காட்டில், குட்கா பதுக்கிய மளிகைக் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவேற்காடு, விஜிஎன் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ்(56). இவர் மதுரவாயலில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவேற்காடு இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று முன்தினம் போலீசார் ஜேசுராஜ் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜேசுராஜை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் இவர் பெங்களூருவில் இருந்து குட்காவை மொத்தமாக வாங்கி வந்து மதுரவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இந்த குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.