பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி அறிவுறுத்தலின்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர் திருவேற்காடு பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நகராட்சி பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 18 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் தொழிற்சாலைகள், 50க்கும் மேற்பட்டோர் வசிக்கும் குடியிருப்புகளில் அந்தந்த பகுதிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போடவும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள், கபசுரக் குடிநீர் வழங்கவும் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் கொரோனாவை தடுப்பதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாக திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அறிவித்துள்ள பொது சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள், வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். எனவே நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….