திருவாடானை, செப். 16: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ரூ.27 லட்சம் உண்டியல் வசூலானது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வன்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயிலில் 7 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக 27 லட்சத்து 38 ஆயிரத்து 734 ரூபாயும், வெள்ளி 1.320 கிராமும், தங்கம் 240 கிராமும் கிடைத்தது. இந்த பணியின் போது தேவஸ்தான மேலாளர் இளங்கோ சிரஸ்தார் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலை ஆட்சித் துறை ஆய்வாளர் சண்முகநாதன், சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.