நாகர்கோவில், செப்.15: குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு திருவிதாங்கோடு வட்டத்தில் இன்று நடக்கும் தொடக்க விழாவில் ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு கடந்த இரண்டு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்பப்பெற முகாம்கள் நடத்தப்பட்டன. பின்னர் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வங்கிகள் மூலமாக புதிய வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டது. பயனாளிகளுக்கு வழங்க ரூபே கார்டுகளும் வந்துள்ளன. பயனாளிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15-ம் தேதி) கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமம் திட்டத்திற்கு சுமார் 4 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு a1000 வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்18ம் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட உள்ளது.
இதன் அடிப்படையில் விடுபட்டவர்கள் தாலுகா அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், ஆர்டிஒ அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமம் திட்டம் தொடர்பாக குறைகள் இருந்தால் தகுந்த சான்றிதழ் வழங்கி அக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொடக்க விழா இன்று (15ம் தேி) தக்கலை அருகே திருவிதாங்கோடு பேரூராட்சி வட்டம் பெரியநாயகி சமுதாய நலக்கூடத்தில் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவில் 2 ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடக்கி வைத்து பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கி பேச உள்ளார். விழாவிற்கு குமரி மாவட்ட கலெக்டர் தர் தலைமை வகிக்கிறார். நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த்எம்.பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் துணைத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.