திருவாடானை, செப். 30: திருவாடானை அருகே திணையத்தூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாத்துரை மகன் பிரகாஷ்ராஜ் (26). இவர் திருவாடானையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்றவர் மதியவேளையில் சாப்பிட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த தனியார் வணிக வளாக கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ்ராஜிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.