திருவள்ளூர்: வேப்பம்பட்டு பிரியா நகரை சேர்ந்தவர் மனோகரன்(50). இவர் பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனோகரன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்துவிட்டு புலியூர் கண்டிகை கிராமத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் என 64 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த திருட்டு குறித்து மனோகரன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி பூந்தமல்லி துணை ஆணையர் முத்துவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். …
திருவள்ளூர் அருகே தனியார் ஊழியர் வீட்டில் 64 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
previous post