Friday, May 17, 2024
Home » திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்: எஸ்பி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்: எஸ்பி தொடங்கி வைத்தார்

by Ranjith

 

திருவண்ணாமலை, அக்.8: திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நேற்று நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியை, எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது சுயவிவரம் மற்றும் பிற விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் விண்ணப்பமாக அளிக்க தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, போட்டி தொடங்கும் முன்பு வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நெடுந்தூர போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று காலை 6 மணிக்கு நெடுந்தூர ஓட்டப்போட்டி நடந்தது. 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக் கல்லூரி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நெடுந்தூர ஓட்டம் நடைபெற்றது. அதேபோல், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு கிரிவலப்பாதையில் அபய மண்டபம் தொடங்கி அவலூர்பேட்டை ரோடு சந்திப்பு வழியாக விளையாட்டு அரங்கம் வரை போட்டி நடந்தது.

மேலும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை போட்டி நடந்தது. நெடுந்தூர ஓட்டப் போட்டி எனப்படும் மாரத்தான் போட்டியை, எஸ்பி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில், வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 4 முதல் 10 இடங்களை பெறுவோருக்கு தலா ரூ.1000 மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் வழங்கினார்.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi