மதுக்கரை, நவ.5. மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (43), ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்து வர சக்திவேல் சென்றுள்ளார். அப்போது பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சக்திவேலின் மகனை கேலி செய்ததாக கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சக்திவேல் அந்த மாணவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேர் தாங்கள் தெரியாமல் செய்து விட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மற்றொரு மாணவர் தனது தந்தையிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த அந்த மாணவனின் தந்தையான பாலக்காட்டை சேர்ந்த மார்ட்டின் ஜோசப் (40) மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் (40) ஆகிய இருவரும் சக்திவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உடன் இருந்த சக்திவேலின் மூத்த மகன் நிஷாந்த் (19), என்பவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து சக்திவேல் க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் மார்ட்டின் ஜோசப், விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.