நாகப்பட்டினம்,ஜன.12: மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருமருகல் வட்டாரத்திற்கு உட்பட்ட அம்பல், மாதிரிமங்கலம், கயத்தூர், ஏனங்குடி, புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் பாதிப்படைந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபாநிர்மலா, வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மழை காலத்தில் நெற்பயிர்களை பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளை கண்டு வயல்களில் தண்ணீரினை வடிந்திட விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்தல் வேண்டும், வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும், வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காது வடிந்திடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும், இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். மேலும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை உரிய கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருமருகல் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்கள்
previous post