திருமயம்,ஜூன்11: திருமயம் அருகே பத்ரகாளி கோயில் மண்டல அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குழிபிறைபட்டி கிராமத்தின் தாய் வன பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று 48வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் காளி கோயிலுக்கு விரதம் இருந்து பால்குடம் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடையே இன்று (11ம் தேதி) மதியம் மகாகாளி பழி பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து கும்ப படையலுடன் மாலை 5 மணி அளவில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தாய் வன பத்திரகாளி தர்ம பீடம் செய்திருந்தது.