Sunday, June 2, 2024
Home » திருமயம் அருகே பட்டா இடம் வழியாக மூதாட்டி சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் கடும் சிக்கல்

திருமயம் அருகே பட்டா இடம் வழியாக மூதாட்டி சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் கடும் சிக்கல்

by Ranjith

 

திருமயம்: திருமயம் அருகே உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை இடுகாட்டிற்கு, பட்டா இடத்தின் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவப்பட்டியில் சுப்பையா என்பவரது மனைவி மீனாட்சி(70) உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த மூதாட்டி மீனாட்சி சடலத்தை இறுதிச் சடங்கு செய்து அப்பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு செல்லும்போது தேவபட்டி கிராமத்தில் அதே சமுதாயத்தை சேர்ந்த சுப்பையா என்பவர், சடலத்தை தனது பட்டா இடத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது எனக் கூறி சுப்பையா மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் உயிரிழந்த மூதாட்டி மீனாட்சியின் உறவினர்கள் சடலத்தை காலங்காலமாக பயன்படுத்தி வந்த அதே பாதையில் தான் கொண்டு செல்வோம் என்று கூறி சடலத்தை பாதையிலேயே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்த மூதாட்டி மீனாட்சியின் உறவினர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் மயானத்திற்கு செல்ல பயன்படுத்தி வரும் பாதையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் அந்த இடத்தை விலைக்கு வாங்கி முள்வேலி அமைத்துள்ளார்.

இதனால் தங்கள் பகுதியில் இடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம் என்றும், தற்போது உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்தப் பாதையில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். இதனையடுத்து சடலத்தை அந்தப் பாதையில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த சுப்பையா மற்றும் அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்தி தற்காலிகமாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அந்த பகுதியில் அமைக்கப்பட்ட முள்வேலியை அகற்றி உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதையை திறந்து விட்டனர். இதனையடுத்து மீனாட்சியின் உடலை திறந்து விடப்பட்ட பாதை வழியாக அவரது உறவினர்கள் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். பட்டா இடத்தின் வழியாக இறந்தவரின் சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

You may also like

Leave a Comment

sixteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi