திருமயம்,ஜூன்.11: திருமயம் அருகே நடைபெற்ற சாதுவின் குருபூஜை விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள் வந்திருந்து வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி குழிபிறை பகுதியில் ஆயிரம் பிள்ளையார் கோவிலின் தென்பகுதியில் ஞானி புல்லான்சாது கோயில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் குருபூஜை விழா நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டு 25ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக கடந்த 9ம் தேதி மாலை 6 மணி அளவில் கோவில் முன்பாக யாக வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று 10ம் தேதி காலை 6 மணி அளவில் புல்லான்சாது சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள் வந்திருந்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் பனையப்பட்டி, குழிபிறை பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சித்தர் பீட அறக்கட்டறையினரும் பனையப்பட்டி கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.