பெண்குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்கு உளுந்தங்களி கொடுப்பது வழக்கம். அதுமட்டும் அல்லாமல் வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெய்யையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, தாது என ஒன்று சேர்ந்து கர்ப்பப்பை பலமாக அமையும்.
இந்த களி செய்யும் முறை இதோ…
அரைகப் உளுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்து வைத்துகொண்டு, இரண்டு கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு இரண்டு கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண் நீக்கவும். வாணலியை சுத்தம் செய்து மீண்டும் அதிலேயே வெல்லக்கரைசலை ஊற்றவும். அதோடு இரண்டு டேமிள்ஸ்பூன் நல்லெண்ணெய், வெல்லம் சேர்த்துச் சூடாக்கவும், கரைசல் கொதிக்கும் போது மாவை மத்தியில் கொட்டி கிளறி ஒரு கரண்டியை அதில் குத்தி வைக்கவும். குறைந்த தணலில் பத்துநிமிடங்கள் வரை வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும். சிறிது ஆறியவுடன் பெண்குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொடுக்கலாம்.
சுகப்பிரசவம் பெற உளுந்தங்கஞ்சி!
உளுந்தை வருத்து நன்கு பொடி செய்து ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் இதனை கஞ்சியாக செய்து குடிப்பதால் சிறுநீரகப் பிரச்னை தீரும். மேலும் இடும்பு , விலா எலும்புகள் பலம் பெற்று சுகப்பிரசவம் பெறுவதற்கு ஏதுவாக உடலை தயார்ப்படுத்தும். மேலும் பிரசவ கால வலிகளும் கூட இதனால் மட்டுப்படும். உளுந்து அதிகம் சாப்பிடும் போது உடன் சுரைக்காய் , வெள்ளைப்பூசணி எடுத்துக்கொள்வது நல்லது. ஏனேனில் சில பெண்களுக்கு அதிக புரதம் யூரிக் ஆசிட்டை தூண்டும், இதனால் கால்கள் வீங்கலாம். எனவே சுரைக்காய், வெண்பூசணி, நூக்கல், சௌசௌ உள்ளிட்டவை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள கர்ப்பகால சிறுநீர் தொற்று பிரச்னைகளும் கூட தடுக்கப்படும். மேலும் கர்ப்பப்பையில் நீர் சமநிலை பெறும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவுகள்
தினமும் ஒரு கப் பால் பகலிலும் இரவிலும்குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல் அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும். பொதுவாக கர்ப்பிணிப்பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்பச்சடி சேர்த்துக் கொள்ள வேண்டும். விரும்பினால் பதினொரு மணிக்கு எடுத்துக்கொள்ளலாம்.
காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ண வேண்டும். காலை டிபனுடன் இரண்டு துண்டு கொய்யா ஒரு ஆரஞ்சு, சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம் மாலையில் ஆப்பிள், உடன் காய்கறிகளை பொரியலாக செய்யும் போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு மூன்று வகை காய்களை சேர்த்துச் செய்யுங்கள்.
மூன்று வகை பழங்கள், நான்கு வகைக் காய்கறிகள் தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்ய வேண்டும். பால், தயிர் குறிப்பட்டபடி அளவு தவறாமல் உண்ண வேண்டும். பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக்கொண்டாலே இரும்புச் சத்துக் கிடைத்துவிடும்.
முழு தானியங்கள் பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம் அடை தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி சாம்பார் சேர்த்து சாப்பிடலாம்.
சோயாவில் முழுப்புரதம் உள்ளதால் தங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு உணவுடன் சிறிதளவு சேர்க்கவேண்டும் உப்பு, ஊறுகாய், காரத்தைக்குறைக்கவும், பழங்கள், காய் கறி, ஜூஸ் சாப்பிடலாம்.
ஓரளவு நன்றாகக் குணிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும். நன்றாக நடக்க வேண்டும். இதனால் பலவித பிரச்சனை களைத் தவிர்க்க இயலும், வீண் வாக்கு வாதங்கள், விவாதங்கள், தவிர்த்து நேரம் கிடைக்கும் போது நல்ல பாடல்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம், மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை அரோக்கியமாக பிறக்கும்.
– காகை ரவிகுமார்