திருமங்கலம் / பேரையூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இதன்படி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்யகளுக்கு இந்த திட்டம் வரும் ஜூலை 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்ற ஆலேசானை கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்கைலாசம் தலைமை வகித்தார். மேலாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
தொடக்கப்பள்ளி அளவில் இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதேபோல், பேரையூர் தாலுகா சேடபட்டியிலுள்ள சமுதாயக்கூடத்தில் முதலமைச்சரின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி யூனியன் ஆணையாளர்கள் ராஜா, சரஸ்வதி ஆகியோர் தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.