திருமங்கலம், மார்ச் 15: திருமங்கலம் பசும்பொன் தெரு விஜயகாளியம்மன் கோயில் மாசி பொங்கலையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். திருமங்கலம் பசும்பொன்தெருவில் அமைந்துள்ளது விஜயகாளியம்மன் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு விரமிருந்து வந்தனர். இதனையொட்டி தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன்படி நேற்று முன்தினம் பொங்கல் திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சுமந்து வந்த முளைப்பாரிகள் குண்டாற்றில் கரைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.