மதுரை, மார்ச் 15: மதுரை, திருப்பாலை, உச்சபரம்புமேட்டைச் சேர்ந்தவர் முனிச்சாமி (52). இவர், அதே பகுதியில் மைக்செட் மற்றும் தொலைக்காட்சி சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பின்புறம் சேவுகப்பெருமாள் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்கிடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த, 12ம் தேதி சேவுகப்பெருமாளின் மனைவி முனிச்சாமியிடம் இடத்தை அளப்பது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் இரவு சேவுகபெருமாள் தனது தாய்மாமன் காந்தியுடன் சேர்ந்து முனிச்சாமியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதுகுறித்து, முனிச்சாமி அளித்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிந்து சேவுகபெருமாள் மற்றும் காந்தி ஆகியோரை கைது செய்தனர்.