திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் பரிவேட்டை உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 8ம் நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசாமி, ஆலத்தூர் கிராமத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, ஆலத்தூர், தண்டலம் கிராமங்களின் வழியாக கந்தசாமி வீதி உலா வந்தார். நேற்று மாலை திருப்போரூர் படவட்டமன் கோயில் தெருவிற்கு நீதிமன்ற உத்தரவின்படி அழைத்துச் செல்லப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், இரவு சிம்ம வாகனத்தில் ஆறுமுகசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று 10ம் நாள் நிகழ்ச்சியாக பகல் 12 மணிக்கு சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.