பல்லடம், மார்ச் 23: திருப்பூர் மாவட்டம் கடந்த 2009ம் ஆண்டு உருவானது. மாவட்டத்துக்கு உட்பட்டு தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய ஐந்து பாராளுமன்ற தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்தில் அடங்கியுள்ளன.
திருப்பூர் எம்பி தொகுதியின் கீழ் திருப்பூர் வடக்கு, தெற்கு, கோவை தொகுதியில் பல்லடம், ஈரோடு தொகுதியில் தாராபுரம், காங்கயம், பொள்ளாச்சி தொகுதியில் உடுமலை, மடத்துக்குளம், நீலகிரி தொகுதியின் கீழ் அவிநாசி ஆகியவை இடம் பெற்றுள்ளன.தேர்தலை முன்னிட்டு, ஐந்து எம்பி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் மாறி மாறி தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்பதால் தேர்தல் களம் திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாகவே காணப்படும்.