திருப்பூர், ஏப்.10: திருப்பூர் தாராபுரம் ரோட்டில் லோகநாதன் (46) என்பவர் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 13 ம் தேதி இரவு இவருடைய கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த ரூ.24 ஆயிரத்தை திருடிச்சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்த லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் பாலபாக்கியா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (33), குப்பனசெட்டியார் வீதியை சேர்ந்த பழனிச்சாமி (53) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.