திருப்புத்தூர், ஜன 30: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் குடியிருப்பு பகுதிகளில் வீட்டிற்குள் நுழைந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை தூக்கிச்செல்லும் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் போஸ்ட் ஆபீஸ் தெரு, பாத்திமா பள்ளி சந்து, நந்தவனத்தெரு உள்ளிட்ட நகரில் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் குரங்குகள், வீட்டில் கதவு திறந்து இருந்தால் உள்ளே நுழைந்து வீட்டில் உள்ள பழங்கள், காய்கறிகள், மற்றும் தின்பண்டங்களை தூக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
மேலும் குரங்குகளை விரட்டினால் அவை கோபமடைந்து தாக்க வருவதாகவும், குடியிருப்புகளின் வெளியே அமைந்துள்ள தண்ணீர் குழாய்களை திறந்துவிட்டு சென்று விடுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதே போன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையிலும் குரங்குகள் காய்கறிகளை தூக்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே நகர் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.