திருத்துறைப்பூண்டி, பிப். 23: திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பி்ல் மரக்கன்றுகள் வளர்ப்பை ஊக்குவிக்க இலவச நாற்றுப்பண்ணை கட்டிமேட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜுவ் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் மாசு அடைவது என்பது மண் மாசுபடுதல், நீர் மாசுபடுதல், காற்று மாசுபடுதல், ஒளி மற்றும் ஒலி மாசுபடுதல் போன்ற பல சூழ்நிலைகளில் சுற்றுச்சூழல் ஆனது மாசடைந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக காற்று மாசு அடைதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மிகவும் பங்காற்றுவது மரக்கன்றுகளை அதிக பரப்பளவில் நடுவது, இந்த சூழ்நிலையில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவதற்கான முயற்சியாக இந்த இலவச நாற்றுப் பண்ணையானது தொடங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மரக்கன்றுகள் அனைத்தும் அரசு பள்ளிகளில் அதிகபட்சம் தலா 30 மரக்கன்றுகள் குமிழ் தேக்கு, நீர்மருது, கருமருது போன்ற டிம்பர் மரங்கள் இலவசமாக வழங்க உள்ளோம். மேலும் மாணவர்களிடையே மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகவும், இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம். எனவே திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள் எங்களை தொடர்பு கொண்டு மரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.