அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை வணிகர்கள் பேணிக் காத்த தகவல், இந்த கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகியோர், திருச்சுழி சுற்றுவட்டாரத்தில் கள ஆய்வு செய்தனர். மூலக்கரைப்பட்டி என்னும் ஊரில், கண்மாய்க் கரையோரமாக கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மூலக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய்க் கரையோரம் 4 அடி உயரமும் ஒன்றரையடி அகலமும் கொண்ட ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தோம். அதன் மேற்புறம் 13 வரிகள், வலதுபுறம் 7 வரிகள் என இருபக்கங்களிலும் எழுத்துக்கள் தென்பட்டன. இவற்றை ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குநரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கத்தின் உதவியோடு படித்துப் பார்த்தோம். கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, இக்கல்வெட்டு கி.பி 10 அல்லது 11ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர் காலத்தை சேர்ந்தது என தெரிய வருகிறது.இக்கல்வெட்டு இருந்த கண்மாய் கரையில், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, அப்பகுதியைச் சேர்ந்த வணிகரான பெற்றான் கழியன் என்பவர் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவர், கற்களைக் கொண்டு உடைப்பு ஏற்பட்ட கரையை சீரமைத்து, அதில் இக்கல்வெட்டையும் வைத்துள்ளார் என தெரிய வருகிறது. நீரின் முக்கியத்துவத்தை அறிந்த, இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களும், நீர்நிலைகளை பேணி பாதுகாத்துள்ளனர் என்பதனை இதன்மூலம் அறியலாம்.இவ்வாறு தெரிவித்தனர்….