திருச்சி, பிப்.13: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள தேசிய மாவட்டங்களுக்கிடையேயான இளையோர் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திலிருந்து 13 வீரர், வீராங்கனைகள் நேற்றிரவு ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி-2024 (நிட்ஜாம்) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிப்.16ம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 14 வயது மற்றும் 16 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டி தேசியளவில் மிகப்பெரிய தடகளப் போட்டிகளில் ஒன்றாகும். இந்த தடகள போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் இருந்து 13 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், டிரையத்லான், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாலர் நீலமேகம், பயிற்சியாளர், உறவினர்கள் உள்பட பலர் விளையாட்டு வீரர்களுக்கு நேற்றிரவு திருச்சி ரயில் நிலையத்தில் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.