செம்பனார்கோயில்: திருக்கடையூர் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு முக்கிய சாலையாக கடைவீதி, சன்னதி வீதி, மேலவீதி, ஆனைகுள சாலை உள்ளிட்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் திருக்கடையூர் சன்னதி வீதி, மேலவீதி, ஆனைகுள சாலை இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.