Wednesday, May 15, 2024
Home » திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர்; டாக்டர் மஸ்தான் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர்; டாக்டர் மஸ்தான் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

by kannappan

சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் இன்று காலை திடீரென மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளராக இருந்தவர் டாக்டர் மஸ்தான்(66). 1995ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்பியாக இருந்தவர். இவர் குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தார். டாக்டர் மஸ்தான் இன்று காலையில் சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திமுகவுடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்!. திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக-அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே!. சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப் பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன். அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக – தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு  ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்-கழகத்தினருக்கும் – சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

nineteen + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi