திண்டுக்கல், செப். 16: திண்டுக்கல் மாநகராட்சிபகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நத்தம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பெண்கள் கழிப்பறை பூட்டிக் கிடந்தது. இதில் சந்தேகமடைந்த மாநகராட்சி ஊழியர்கள் பூட்டை உடைத்து திறந்து பார்த்தனர்.
அங்கு குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கிலோ புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பொது சுகாதார துறையினர் உடனிருந்தனர்.