திண்டுக்கல், மே 10: திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் நிக்கி மைக்கேல் ஹென்றி (21). தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி பின்புறம் உள்ள அன்னை நகரில். உறவினர் லியோ ரோசாரியோ என்பவரது வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார்.இரவு பலத்த மழை பெய்ததால் உறவினர் வீட்டிலேயே நிக்கி மைக்கேல் ஹென்றி தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை எழுந்து வந்து வெளியே பார்த்த போது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது டூவீலர் மாயமாகி இருந்தது. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
இதில் பாலமரத்துப்பட்டி சாலை அன்னை நகர் 2வது தெரு நுழைவாயில் பகுதியில் உள்ள கடை முன்பு, அவரது டூவீலர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எரிக்கப்பட்ட வாகனத்தை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் டூவீலரை திருடிச் சென்று தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.