திண்டுக்கல், ஜன. 26: குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. குடியரசு தின விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள், பந்தல், குடிநீர். கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவில் அணிவகுப்பு நடத்துவதற்கான ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியை ஏந்தியபடி கம்பீரமாக நடந்து சென்று அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.