திண்டிவனம், ஜூலை 7: திண்டிவனம் மேம்பாலம் சீரமைக்கும் பணியின்போது, மேம்பாலத்தின் மேல் இருந்து கற்கள் விழுந்ததில், பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மேம்பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது புதுச்சேரி மார்க்கமாக உள்ள மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று காலை முதல் மேம்பாலத்தின் மேல் தார் சாலை போடும் பணி நடைபெற்றது. அப்போது மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் இறையானூர் நித்யா(12), அவரது சகோதரி கோபிகா(11) ஆகியோர் மீது மேம்பாலத்தின் மேல் இருந்து கற்கள் விழுந்ததில் இருவரும் காயம் அடைந்தனர். 2 மாணவிகளையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பின்னர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர்.
திண்டிவனத்தில் மேம்பாலம் சீரமைப்பில் கற்கள் விழுந்ததில் 2 மாணவிகள் படுகாயம்
previous post