நாகப்பட்டினம்: திட்டச்சேரி மகாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி மகாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம் நடந்தது. நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதியுலா நடந்தது. அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சியும், பெரியாச்சி, வீரனுக்கு படையல், விடையாற்றி நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.