சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, நேற்று காலை திடீரென அவசர பத்திரிகையாளர் சந்திப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டினார். அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படாததால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு குறி வைத்தவர் தங்கபாலு. அது ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்தார். எனவே முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போகிறார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனல் சாதி வாரி கணக்கெடுப்பை பற்றி சொல்லி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.உண்மையில் வேறு ஏதோ சொல்வதற்காக பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அவசர அழைப்பு விடுத்திருந்தார். கடைசி நேரத்தில் அதை மாற்றிவிட்டார் என காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். பேட்டியளித்த தங்கபாலு, ‘‘சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பீகார், ஆந்திர முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோல இங்கும் சட்டமன்றத்தை கூட்டி அங்கு அனைத்து கட்சி ஆதரவோடு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்’’ என்றார். மேலும், ஒருபோதும் காங்கிரஸை விட்டு விலக மாட்டேன்’’ என்றார்….