சத்தியமங்கலம், ஆக.18: தாளவாடியில் வாகன சோதனையில் மொபட் வாகனம், 130 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் இருந்து பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வருவாய்த்துறை ஊழியர்கள் ராமாபுரம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர். வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதைத்தொடர்ந்து மொபட்டில் வைத்திருந்த 3 சாக்கு மூட்டைகளில் 130 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் பிடிபட்ட ரேஷன் அரிசி மற்றும் மொபட் வாகனத்தை தாளவாடி போலீசார் மூலம் ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.