Wednesday, May 22, 2024
Home » தாய், மகள் உட்பட 4 பெண்கள் ஏரியில் மூழ்கி பரிதாப பலி குடியாத்தம் அருகே சோகம் முனீஸ்வரர் கோயில் வழிபாட்டுக்கு சென்றபோது

தாய், மகள் உட்பட 4 பெண்கள் ஏரியில் மூழ்கி பரிதாப பலி குடியாத்தம் அருகே சோகம் முனீஸ்வரர் கோயில் வழிபாட்டுக்கு சென்றபோது

by Karthik Yash

குடியாத்தம், மார்ச் 31: குடியாத்தம் அருகே முனீஸ்வரர் கோயிலில் வழிபாட்டுக்கு சென்றபோது தாய், மகள் மற்றும் சகோதரிகள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரோஜா அம்மாள்(50). இவர்களது 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. 4வது மகள் லலிதா(28) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதித்து இறந்துவிட்டார். அதே பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(45), டெய்ல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா(40). இவர்களது மூத்த மகள் காவியா(18) கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். 2வது மகள் பிரீத்தி(17) பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சரோஜா அம்மாள், லலிதா, காவியா, பிரீத்தி ஆகிய 4 பேரும் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளனர். அங்கு வழிபாடு முடிந்த பின்னர் அருகில் உள்ள வேப்பூர் ஏரியில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 4 பேரும் தவறி ஏரியில் விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளனர். இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 2 மணி நேரம் போராடி 4 பேரையும் சடலமாக மீட்டனர். இதையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

19 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi