தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இன்று (25ம் தேதி) மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம், முத்துலிங்கம் தெருவில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு முகாம் நடைபெறுகிறது. பின்னர் மதியம், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதிகளுக்கு செம்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜபுரம் விளையாட்டு மைதானத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில், தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளின் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு காணலாம் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்….