தாம்பரம்: தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது, 51 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்த சடலத்தின் அருகே கருப்புநிற கைப்பையும், அதில் சாவி ஒன்றும் இருந்தது. சடலத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அகரம்தென் பகுதியை சேர்ந்த எஸ்தர் (51) மதபோதனை செய்து வந்ததாகவும், கடந்த மே மாதம் 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும், சிவப்பு ஜாக்கெட், சந்தனகலர் புடவை அணிந்திருந்ததாகவும் அவரது மகள் ஏஞ்சலின் சேலையூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து ஏஞ்சலினை போலீசார் அழைத்து சென்று பிரேதத்தை காட்டியபோது, சடலமாக இருந்தவர் தனது தாய்தான் என அடையாளம் காட்டினார். இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான எஸ்தர் எப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார். அவரை யாராவது கடத்தி சென்று கொலை செய்துவிட்டு உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் போலீசார் கொலை செய்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட எஸ்தரின் செல்போன் மாயமாகி இருந்ததால் அவரது செல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த நபர் பயன்படுத்திய செல்போனை தற்போது வேறு ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.எனவே செல்போனை பயன்படுத்தி வரும் நபர்தான் எஸ்தரை கொலை செய்திருப்பார் என சந்தேகித்த போலீசார் செல்போனை பயன்படுத்தி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். மதுரபாக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் தனக்கு செல்போனை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். லோகநாதனை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், அகரம்தென் பிரதான சாலையில் மப்பேடு சந்திப்பு அருகே நடந்து சென்றுகொண்டிருந்த மப்பேடு மந்தைவெளி தெருவைச் சேர்ந்த லோகநாதனை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.லோகநாதன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: சம்பவத்தன்று நான் போதையில் எனது வீட்டிற்கு கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தேன். அந்த பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று பூ பறித்துக்கொண்டிருந்தார். மது அருந்த பணம் தேவைப்பட்டதால் அந்த பெண் அருகில் சென்று கையில் வைத்திருந்த கைபையை பறிக்க முயன்றேன். அவர் சத்தம் போட்டதால் கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து செல்போன், கைபையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டேன். அந்த பையில் 700 ரூபாய் இருந்தது. அதன்பிறகு எனக்கு ஒன்றும் தெரியாது. பெண்ணிடம் பறித்த செல்போனை ஒருவரிடம் 500 ரூபாய்க்கு விற்றேன். பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்துதான் அந்த பெண் இறந்தது தெரியவந்தது. இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட லோகநாதனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்….