தாம்பரம், செப்.4: தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் பால் கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். இவர், நேற்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதேபோல், அருகில் உள்ள செல்போன் கடையிலும் ஒரு பூட்டை உடைத்துள்ளனர். மற்ற பூட்டுகளை உடைக்க முடியாததால் கொள்ளையடிக்க முடியாமல் சென்றுள்ளனர். இதனால், அந்த கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் செல்போனுக்கு தேவையான பொருட்கள் தப்பியது.
அதே பகுதியில், அரை கிலோ மீட்டர் தொலைவில் சந்திரசேகரன் என்பவரின் நாட்டு மருத்து கடையிலும் ஷட்டர் பூட்டை உடைத்து, கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரித்தனர். அதில், பெரிய இரும்பு கம்பி மூலம் கடைகளின் பூட்டு உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.