சென்னை: விருகம்பாக்கம் ஜெய்ன் கென்ஸ் அபார்ட்மென்ட் ரெட்டி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 3வது தளத்தில் பொறியியல் தம்பதி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர தாய் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இளைய மகள் சாய் கிராணா (7) தூங்கிக் கொண்டிருந்ததால் அவளது தாய் வீட்டின் கதவை பூட்டாமல் சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவு தானாக பூட்டிக்கொண்டது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்ட சாய் கிராணா வெளியே வரமுடியாமல் அழுதுகொண்டு இருந்துள்ளார். வீட்டின் சாவியை எடுத்து செல்லாததால் பூட்டிய வீட்டின் கதவை திறக்க முடியாமல் அவரது தாய் தவித்தார்.பிறகு சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் தானியங்கி கதவு எண்பதால் திறக்க முடியவில்லை. பிறகு தீயணைப்பு வீரர் அகஸ்டின் அமர்நாத் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பக்கம் ஏணி உதவியுடன் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்று 7 வயது சிறுமியை பத்திரமாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வீட்டிற்குள் சிக்கிய குழந்தையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை வீர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்….