Tuesday, June 11, 2024
Home » தாட்கோ மற்றும் எச்.சி.எல் நிறுவனம் இணைந்துவேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு; மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தகவல்

தாட்கோ மற்றும் எச்.சி.எல் நிறுவனம் இணைந்துவேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு; மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தகவல்

by kannappan

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்க்கு தாட்கோ மற்றும் எச்.சி.எல் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பை வழங்க இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பினை தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் முதல் ஆண்டில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் ஆறு மாதங்களுக்கு இணைய வழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்கு தேவையான மடிகணினி நிறுவனமே வழங்கும். அடுத்த ஆறு மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ஆறாம் மாதம் முதல் மாணாக்கர்களுக்கு நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் வருடத்தில் மாணாக்கர்களுக்கு மூன்று விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும்.அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மதிப்பு மிக்க பிட்ஸ் – பிலானி பல்கலை கழகத்தில் பி.எஸ்சி (டிசைன் கம்பியூட்டர்) பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பானது பி.டெக் க்கு சமமான படிப்பாகும். இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பினை எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இக்கல்லூரியில் சேர்வதற்கு 12ம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலை கழகத்தில் மாணாக்கர்களின் தகுதிற்கேற்ப எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் பிசிஏ 3 வருட பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமிடி பல்கலைக் கழகத்தில் மூன்று வருடம் பிசிஏ, பிபிஏ மற்றும் பி.காம் பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இந்த வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டு 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில், தாட்கோவின் பங்களிப்பாக எச்.சி.எல்  நிறுவனம் நடத்தும் நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாணாக்கருக்கும் பயிற்சிக்கான கட்டண தொகையை தாட்கோவே ஏற்கும். பின்னர், தேர்ச்சி பெற்ற மாணாக்கருக்கு எச்.சி.எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 லட்சம் கட்டண தொகையை முதல் ஆறு மாத பயிற்சி காலத்தில் தாட்கோ கல்வி கடனாக வழங்கும்.பிட்ஸ் – பிலானி பல்கலைக் கழகத்தில் நான்கு வருடம் சாஸ்தரா மற்றும் அமிடி பல்கலைக் கழகத்தில் 3 வருடம் பட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் எச்.சி.எல் நிறுவனத்தில் முதல் ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் ஆண்டு வருமானம் ரூ.1.17 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இத்தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளிலும் குறைந்த பட்சமாக 10 மதிப்பெண்ணிற்கு 4 மதிப்பெண் பெற்றால் போதுமானதாகும். மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்….

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi