Saturday, May 11, 2024
Home » தவளக்குப்பத்தில் நள்ளிரவில் பயங்கரம் உருட்டு கட்டையால் அடித்து வாலிபர் கொலை

தவளக்குப்பத்தில் நள்ளிரவில் பயங்கரம் உருட்டு கட்டையால் அடித்து வாலிபர் கொலை

by Karthik Yash

தவளக்குப்பம், பிப் 16: முன்விரோத தகாராறில் வாலிபரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த உணவு டெலிவரி செய்யும் ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி-கடலூர் சாலை இடையார்பாளையம் அடுத்த என்ஆர் நகரை சேர்ந்த முருகையன்- அஞ்சலாட்சி தம்பதியரின் மூன்றாவது மகன் ஜெகதீஷ்வரன்(21). கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அருகே உள்ள பாரில் ஜெகதீஷ்வரன் மது குடித்தபோது, அதேபகுதியை சேர்ந்த அருமைச்செல்வம் மகன் ரிஷி(27) (தனியார் உணவு டெலிவரி ஊழியர்) இவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்விரோதம் ஏற்பட்டு, ஜெகதீஷ்வரனை தெருவில் நடந்து செல்லும்போது ரிஷி அடிக்கடி முறைப்பதும், மிரட்டுவதுமாக இருந்ததாக தெரிகிறது. நேற்று மாலை பாரில் ஜெகதீஷ்வரன் மது குடித்துள்ளார்.

அப்போது அங்கு ஏற்கனவே மது குடித்துக்கொண்டிருந்த ரிஷி முறைத்து பார்த்ததில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிஷி என்னிடம் வைத்துக் கொண்டால், உன்னை போட்டுத் தள்ளிவிடுவேன் என ஜெகதீஷ்வரனை மிரட்டியதாக கூறப்படுகிறது. பிறகு வீட்டுக்கு வந்த ஜெகதீஷ்வரன் நடந்த சம்பவத்தை தாய் அஞ்சலாட்சியிடம் கூறியுள்ளார். இரவு 12 மணியளவில் வீட்டின் வெளியே காற்றோட்டமாக நின்றிருந்த ஜெகதீஷ்வரனை கையில் உருட்டுக்கட்டையுடன் பின் தொடர்ந்து வந்த ரிஷி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த அவரை, தொடர்ந்து கட்டையால் தாக்கியதில், தலை சிதைந்து மூளை வெளியே வந்துவிட்டது. ஜெகதீஷ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டதால், ரிஷி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

உடனே ஜெகதீஷ்வரனை மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவான ரிஷியை தேடி வந்தனர். இதற்கிடையே தவளக்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த ரிஷியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரை ரகசிய இடத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் ஏற்கனவே ஒருவரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற போது தர்ம அடி வாங்கியதும், அப்போது தனக்கு மனநோய் பாதித்துள்ளதாகவும், சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மாத்திரை எடுத்துவருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும்போது இதே யுக்தியை பயன்படுத்தி ரிஷி தப்பித்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi