விக்கிரவாண்டி, பிப். 28: விக்கிரவாண்டி தாலுகா, விக்கிரவாண்டி பேரூராட்சியில் இடத்தின் உரிமையாளர்கள் இருக்கும் போது தவறான ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கியதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட விஏஓக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பேரூராட்சியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் திடீரென திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் விக்கிரவாண்டி பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், நகர செயலாளர் நைனா முகமது ஆகியோர் பொதுமக்கள் சார்பில் தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரம் மற்றும் அதற்கான ஆவணங்களை தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அதன் மீது தனி குழு அமைத்து விசாரணை செய்து, விசாரணை அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் யுவராஜ் உறுதி கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென திரண்டு முற்றுகையிட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான முறையில் பட்டா வழங்குவதை கண்டித்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
previous post