மாதவரம்: வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் நூருதீன் (24). நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் (40) என்பவர் நூருதீன் வீட்டின் அருகே பீடி புகைத்துக் கொண்டிருந்தார். அப்போது நூருதீனின் தாய் அருகில் நின்று கொண்டிருந்தார். ஜெயகாந்தன், பீடி புகையை நூருதீனின் தாய் மீது விட்டுள்ளார். அப்போது ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், தள்ளிச் சென்று பீடி புகையுங்கள் என நூருதீன் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயகாந்தன் அருகில் கிடந்த கம்பியை எடுத்து நூருதீன் கையில் பலமாக அடித்தார். இதில் அவரது இடது கை எலும்பு உடைந்தது. அக்கம் பக்கத்தினர் நூருதீனை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் ஜெயகாந்தை கைது செய்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.