மூணாறு : மூணாறு – மறையூர் சாலையில் தலையார் எஸ்டேட் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 70 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இருப்பினும், லாரியில் இருந்த டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஊட்டியிலிருந்து மூணாறுக்கு காய்கறி ஏற்றிவந்த வந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் கேரள மாநிலம் மூணாறு – மறையூர் சாலையில் உள்ள தலையார் எஸ்டேட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 70 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.லாரியின் டிரைவர் உறங்கியது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரி அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களில் மோதி நின்றதால் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் உயிர்தப்பினர் என தெரியவருகிறது. காயமடைந்த இருவரும் தலையார் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மூணாறிலிருந்து மறையூர் செல்லும் சாலையில் நயம்க்காடு கேப் முதல் தலையார் வரையுள்ள பகுதிகளில் அதிக ஆபத்து நிறைந்த குறுகிய வளைவுகளும், சாலையின் ஒரு புறம் ஆபத்தான பள்ளத்தாக்குகளும் நிறைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் வாகன விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளன. கடந்த வாரம் இப்பகுதியில் 800 அடி பள்ளத்தாக்கில் ஒரு கார் கவிழ்ந்து டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார். அதிக மேகக்கூட்டம் நிறைந்த பகுதி என்பதும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாகிறது. அதனால், இப்பகுதிகளில் தேவையான இடங்களில் பாதுகாப்பு சுவர் மற்றும் விபத்து முன் அறிவிப்பு பலகைகள், ரிப்லெக்டர்கள் அமைத்து விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டிரைவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது….