சென்னை: சென்னை கே.ேக.நகர் பாரதிதாசன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சீதாலட்சுமி (78). இவருக்கு, புவனேஸ்வரி என்ற மகளும், சிவக்குமார் என்ற மகனும் உள்ளனர். புவனேஸ்வரி தனது கணவருடன் துபாயில் வசிக்கிறார். சிவக்குமார் அடையாறில் மனைவியுடன் வசிக்கிறார். சீதாலட்சுமியின் கணவர் குருமூர்த்தி கடந்த ஓராண்டுக்கு முன் இறந்ததையடுத்து, மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சீதாலட்சுமி தனியாக வசித்து வந்தார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததால் வீட்டு வேலைக்கு ஆட்கள் யாரையும் வைக்காமல், அவரே சமைத்து சாப்பிட்டு வந்தார்.துபாயில் வசிக்கும் மகள் புவனேஸ்வரி தினமும் காலை 10 மணிக்கு தாய் சீதாலட்சுமியிடம் போனில் பேசுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு செல்போனில் தாயை தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை செல்போனில் அழைத்தும் தாய் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த புவனேஸ்வரி, அருகில் வசிக்கும் ரித்தீஷ் என்பவரை தொடர்பு கொண்டு, இதுபற்றி கூறியுள்ளார். அதன்பேரில் ரித்தீஷ், சீதாலட்சுமி வீட்டிற்கு சென்றபோது, வீடு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்த போது சீதாலட்சுமி படுக்கை அறையில் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனே ரித்தீஷ் துபாயில் உள்ள புவனேஸ்வரிக்கு தகவல் கொடுத்தார். மேலும், எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், சீதாலட்சுமியை பார்த்த போது அவர் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்து இருந்த 2 செயின், 7 வளையல் என 16 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பின்னர் சீதாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பாரதிதாசன் காலனியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று கொள்ளையனை தேடி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் ஆட்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். …