வேலூர், ஆக. 14: காட்பாடி காங்கேயநல்லூர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 200க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் படித்து வரும் இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பள்ளியில் கழிவறை வசதி இல்லை. திறந்தவெளியில் அமர்ந்து சத்துணவு சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.
எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீரென பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் கழிவறைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதும், மாணவர்களுக்கு மதிய உணவு உண்ண இடவசதி இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த குறைபாடுகளுக்கு காரணமான பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கற்பகமணி மற்றும் தலைமை ஆசிரியை லீமா ரோஸ் ஆகியோர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை ேமற்கொண்டு, அதன் விவரத்தினை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.